கோவையில் உலா வந்த ராட்சத முதலை… அலறியடித்து ஓட்டம் பிடித்த மக்கள்..!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள நீர்வழி குட்டைpond யானது,வடவள்ளி, தாளத்துறை உள்ளிட்ட பகுதிகள் வழியாக பட்டக்காரனூர் கிராமத்தின் வழியாக பவானி ஆற்றினை சென்றடைகிறது.

இந்த குட்டையில் கடந்த 8 மாதங்களாக 10 அடி அளவுக்கு ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் அதில் முதலை நடமாட்டம் இருப்பது தெரிய வந்ததையடுத்து, சிறுமுகை வனத்துறையினர் சமீபத்தில் குட்டையில் தேங்கி இருந்த தண்ணீரை வெளியேற்றி அங்கிருந்த 15 அடி நீள முதலையை பிடித்தனர்.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று மீன் பிடிப்பதற்காக குட்டை பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, வலையின் அருகே ராட்சத முதலை இருப்பதை கண்டு அலறி அடித்து ஓடியுள்ளனர்.

வனத்துறையினர் முதலையை பிடிப்பதற்காக அண்மையில் குட்டையில் இருந்த நீரை வெளியேற்றிய நிலையில், தற்போது அங்கு ஊற்று நீரால் குட்டை நிரம்பி வருகிறது. இந்த நிலையில் குட்டையில் மீண்டும் முதலை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.