கோவை விமான நிலையத்தில் தங்க கட்டிகள், வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்.!!

கோவை விமான நிலையத்திலிருந்து சார்ஜா ,சிங்கப்பூர், உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்னை, மும்பை, பெங்களூரு ,டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து கோவை வரும் விமானங்களில் தங்கக் கட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வரும் ஸ்கூட் விமானத்தில் தங்கக் கட்டிகளை கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது .அதன் பேரில் சிங்கப்பூரிலிருந்து கோவை விமான நிலையத்தில் வந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள்கண்காணித்தனர் அப்போது 2 பயணிகளின் நடவடிக்கைகள் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படுத்தியது. உடனே அவர்கள் 2 பேரையும் ரகசிய அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் ஒருவர் தலா 100 கிராம் எடை கொண்ட 8 தங்கக் கட்டிகளை பொருள்களுக்குள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் அந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.அதன் மதிப்பு ரூ 5 லட்சம் இருக்கும் அது போன்று மற்றொரு பயணியின் உடைமைகளை சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையை திறந்து பார்த்தபோது அதில் ஏராளமான வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தன .அவற்றை கொண்டுவர உரிய அனுமதி பெறவில்லை. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த பயணியிடம் இருந்து90 ஆயிரம் சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 15 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். அந்த 2 பேரிடமும் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.