கோவை பைனான்ஸ் அதிபர் வீட்டில் தங்க நகை,பணம் திருட்டு – மர்ம ஆசாமிகள் கைவரிசை..!

கோவை வடவள்ளி அருகே உள்ள ஐ.ஓ.பி. காலனி, குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 70) பைனான்ஸ் அதிபர். இவரது மனைவி பெரியநாயகி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதில் ஒரு மகள் எகிப்து நாட்டிலும், மற்றொரு மகள் பெங்களூருவிலும் வசித்து வருகிறார்கள். இதனால் வீட்டில் சுந்தரமும் பெரியநாயகி மட்டும் வசித்து வருகின்றனர். கடந்த 10-ந் தேதி சுந்தரம் தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு காரைக்குடியில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றார். அவர் நேற்று இரவு வீட்டிற்கு வந்தபோது முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், பணம் ரூ 80 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து சுந்தரம் வடவள்ளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார் . இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்..