கோவை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி… ஆகஸ்ட் 10 முதல் 3ஆவது சர்வதேச விமானம் இயக்கம்.!!

கோவை விமான நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 10 முதல் 3-வது சர்வதேச விமானம் இயக்கப்படவுள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது சென்னை, டெல்லி, மும்பை பெங்களூரு உள்ளிட்ட உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது.

சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களிலும் ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும் நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது. கோவையில் இருந்து துபாய்க்கு அல்லது அபுதாபிக்கு நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என கோவை மக்கள், தொழில் அமைப்புகள், சுற்றுலா முகவர்கள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கின்றனர். இந்த நிலையிலே, இண்டிகோ நிறுவனம் சார்பில் கோவை – அபுதாபி இடையே நேரடி விமான சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் இந்த புதிய சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து அபுதாபிக்கு இண்டிகோ நிறுவனம் சார்பில் விமான சேவை ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் தொடக்கப்படும். வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் விமான சேவை வழங்கப்படும். அபுதாபியில் இருந்து அதிகாலை 12:40 மணியளவில் புறப்பட்டு காலை 6: 25 மணியளவில் கோவை விமான நிலையத்தை வந்தடையும். அதேபோல் மீண்டும் கோவையில் இருந்து காலை 7:40 மணிக்கு விமானம் புறப்பட்டு காலை 10 மணி அளவில் அபுதாபி சென்றடையும். மொத்தம் 186 பேர் பயணிக்க கூடிய வகையிலான ஏ 320 ரக விமானம் இந்த சேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு வழி கட்டணமாக ரூ 10,000 முதல் விமான கட்டணம் வசூலிக்கப்படும். பல ஆண்டுகளுக்குப் பின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் பல தரப்பினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.