திருச்சி மாநகராட்சியோடு ஊராட்சிகள் சேர அரசு நெருக்கடி தரவில்லை – அமைச்சர் நேரு பேட்டி..!

திருச்சி மாநகராட்சியோடு ஊராட்சிகள் கட்டாயமாக சேர வேண்டும் என்று தமிழக அரசு நெருக்கடி தரவில்லை மேலும் விருப்பம் உள்ள ஊராட்சிகள் சேர்ந்தால் சேரலாம் சேராவிட்டாலும் அது பற்றி அரசுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாரிஸ் தியேட்டர் மேம்பாலம் பணிகள் நடப்பதில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் ரயில்வே நிர்வாகத்திடமிருந்து சில அனுமதிகள் பெற வேண்டும் என்பதால், அது காலதாமதம் ஆகிறது. தமிழக அரசு பாலத்தைக் கட்டுவதற்கு தயாராக இருக்கிறோம். இது குறித்து ரயில்வே கோட்ட மேலாளரிடம் மாவட்ட ஆட்சியர் பேசியுள்ளார் விரைவில் பணிகள் முடிக்கப்படும்.
இந்த மாதம் புதிய பேருந்து முனையம் தொடங்குவதாக கூறி கால அவகாசம் கொடுத்திருந்தோம். ஆனால், கூடுதலாக 100 கோடி ரூபாய்க்கான ரிவைஸ்டு எஸ்டிமேட் போடப்பட்டு, அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். அதில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, உணவகங்கள் போன்றவை இருக்கும் வகையில், டிசம்பருக்குள் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.
வருகிற செப்டம்பர் 4ஆம் தேதி மழைநீர் அகற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடக்க உள்ளது. சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன.அனைத்து பகுதிகளிலும் ஆகாய தாமரையை அகற்றி விட்டோம்.சென்னை மாநகராட்சியில் புதிதாக ரூ.22 கோடி மதிப்பில் எந்திரம் வாங்கி உள்ளோம். அந்த எந்திரத்தை பயன்படுத்தி அனைத்து வாய்க்காலிலும் தூர்வாரப்பட்டு வருகிறது.
எவ்வளவு மழை பெய்தாலும் தாங்கக்கூடிய அளவிற்கு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாது எல்லா மாநகராட்சிகளிலும் வாய்க்காலை சுத்தப்படுத்த அறிவுறுத்தி உள்ளோம். மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் அனைத்து இடங்களிலும் முடிந்து விட்டது. 20 செ.மீ., 25 செ.மீ. மழை பெய்தால் எந்த வடிகாலுக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது. அதிகமாக மழை பெய்தால் கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டும் மழை நீர் தேங்கும். அங்கு மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. தண்ணீர் தேங்கினால் மோட்டார் வைத்து உடனே அகற்றப்படும். எல்லா சுரங்கப்பாதைகளையும் சுத்தம் செய்து விட்டோம்.
ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைவதில் மறுப்பு தெரிவிப்பது குறித்து பேசிய அவர் யார் விருப்பப்படுகிறார்களோ, அவர்கள் திருச்சி மாநகராட்சியுடன் வந்து இணைந்து கொள்ளலாம். நாளுக்கு நாள் மாநகராட்சியின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. அதேநேரம் வெளி மாவட்டங்களில் இருந்து திருச்சிக்கு வரக்கூடிய பொதுமக்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
எனவே ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால் மட்டுமே பொதுமக்கள் வந்து குடியேறுவதற்கு ஏதுவாக அமையும். இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி உடன் ஊராட்சிகளை இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. நாங்கள் யாரையும் வலுக்கட்டாயமாக மாநகராட்சியுடன் இணைக்க விரும்பவில்லை.
சமயபுரம், மண்ணச்சநல்லூர், மாந்துறை, லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றி கையெழுத்து போட்டுக் கொடுத்துள்ளனர். அதில் இரண்டு கிராமங்களை மட்டும் சேர்க்க வேண்டாம் என்று கூறினார்கள். அதை வேண்டாம் என்று நாங்கள் நிராகரித்து விட்டோம் என்றார். யாரையும் இந்த அரசு கட்டாயமாக நீங்கள் மாநகராட்சி இணைய வேண்டும் என்று கட்டளை இடவில்லை மாநகராட்சியுடன் சேர்ந்தால் அதிக நன்மை உள்ள திட்டங்கள் அங்கு உள்ள மக்களுக்கு கிடைக்கும் என்றார்.