தபால் நிலையத்தில் ரூ.20 லட்சத்து 50 ஆயிரம் கையாடல் – பெண் அதிகாரி மீது வழக்குபதிவு .!!

கோவையை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 58) இவர் துடியலூர் அருகே உள்ள என். ஜி ஜி. ஓ காலனியில் உள்ள துணை தபால் நிலையத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்த தபால் நிலையத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 – ந் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ஆம் தேதி வரை உள்ள கணக்குகளை கோவை வடக்கு டிவிஷனல் உதவி சூப்பிரண்டு பாலாஜி திடீர் ஆய்வு செய்தார். இதில் பல லட்சம் ரூபாய் கையாடல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் வாடிக்கையாளர் தங்களது கணக்கில் செலுத்த கொடுத்த பணத்துக்கு அவர்களின் புத்தகத்தில் வரவு வைத்துவிட்டு பணத்தை தபால் நிலையத்தில் செலுத்தாமல் இருந்ததும் அந்த வகையில் அந்த தபால் அதிகாரியான மகேஸ்வரி ரூ 20 லட்சத்து 50 ஆயிரம் கையாடல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து உதவி சூப்பரண்டு பாலாஜி துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் தபால் நிலைய அதிகாரி மகேஸ்வரி மீது மோசடி உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் ..