முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானின் அவதார தினமான விநாயகர் சதுர்த்தி நன்னாளில் விநாயகரை நம்முடைய வீட்டிற்கு அழைத்து, உபசரித்து, அவரது அருளை பெற்றிடுவோம். விநாயகர் நம்முடைய வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி, மகிழ்ச்சியை அளித்திடுவார். இதனையொட்டி, விநாயகர் சதுர்த்தியை ஏன் கொண்டாடுகிறோம்..? அதன் வரலாறு என்ன..? விநாயகருக்கு எப்படி யானை முகம் வந்தது.? உள்ளிட்ட தகவல்களை பற்றி சுருக்கமாக பார்ப்போம்..
முதன்மை கடவுளாக விளங்கும் விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்படுவது தொடர்பாக பல புராண கதைகள் உள்ளன. கஜமுகாசுரனை கொன்றதால் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது என்பதும் ஐதீகம்…
சிவபெருமானின் அருள் பெற்ற கஜமுகாசுரன் தான் பெற்ற வரத்தின் வல்லமைகளால் தலைகணம் கொண்டு தேவர்களை பல வழிகளில் துன்புறுத்தி வந்துள்ளார். தன்னை மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ யாரும் கொல்ல முடியாதபடி கஜமுகாசுரன் வரம் பெற்று இருந்ததால் செய்வதறியாமல் தேவர்கள் திணறி வந்தனர்.
எனவே, அனைத்து தேவர்களும் ஒன்றாக திரண்டு சிவ பெருமானிடம் சரணடைந்தனர். இதனால் அவர் ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகரை யானை முகத்தோடும், மனித உடலோடும் படைத்து கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார்.

