தாய் மொழிக்கு முக்கியத்துவம்…கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் முதல்வர்களுக்கு அவரவர் தாய் மொழியில் பெயர் பலகை..!

தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சென்னை கிண்டியில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க 7 மாநிலங்களை சேர்ந்த 29 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் ஆகிய மூன்று மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறும் நட்சத்திர ஹோட்டலுக்கு வருகை புரிந்த முதல்வர் ஸ்டாலின், கூட்டத்தில் பங்கேற்கும் மற்ற மாநில பிரதிநிதிகள் ஒவ்வொருவரையும் சால்வை அணிவித்து வரவேற்றார்.

மேலும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு ஊட்டி வர்க்கி, கோவில்பட்டி கடலை மிட்டாய், கன்னியாகுமரி கிராம்பு உள்ளிட்ட தமிழகத்தின் 8 சிறப்பு வாய்ந்த பொருட்கள் அடங்கிய பரிசு பொருட்களை மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரித்த பரிசுப்பெட்டியில் வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிலையில் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கு ஆங்கிலம் மற்றும் அவரவர் தாய்மொழியில் பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி, பஞ்சாபி ஆகிய 5 மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி கூட்டத்தில் மற்றவர்கள் பேசுவதை அவரவர் தாய் மொழியில் கேட்கும் வகையில் தொழில்நுட்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தில் பேசுவதை கேட்க ஹெட்செட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தலைவர்கள் பேசுவதை உடனுக்குடன் அவரவர் தாய் மொழியில் மொழி பெயர்க்கும் கருவிகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன