மற்ற நாடுகளை பின்பற்றினால் இந்தியா வளர்ச்சி காண முடியாது- ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்..!

மும்பை: மற்ற நாடுகளை பின்பற்றினால் இந்தியா வளர்ச்சிகாண முடியாது என்று கூறியுள்ளார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்.

பால விகாஸ் பரிஷத் அமைப்பின் நிறுவனர் சூரஜ் பிரகாஷின் நூற்றாண்டு விழாவில் பேசிய மோகன் பாகவத், “இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியர்களாகிய நாம் நமது தலையை மெருமிதத்தால் நிமிர்த்திக் கொண்டுள்ளோம். முன்பு நம்மை சீந்துவார் இல்லை. இன்று நாம் ஜி20 மாநாட்டை தலைமையேற்று நடத்துகிறோம். இப்போது அறிவுறுத்தியது போல் முன்பு நாம், ரஷ்யாவிடம் போர் தொடுக்க வேண்டாம் என்று கூறியிருந்தால் அவர்கள் நம்மை அசட்டை செய்திருப்பார்கள். ( ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ‘போர் தொடுப்பதற்கான காலம் அல்ல இது ‘ என ரஷ்ய அதிபர் புதினிடம் நேரடியாக தெரிவித்திருந்தார் )

இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்த வேளையில் நாம் அடைந்த வெற்றிகளை நாமே வியந்து பார்க்கிறோம். 2047க்குள் இந்தியா வல்லரசாக உருவாக வேண்டும். அதற்கான பாதையை வகுத்து இந்தியா முன்னேறும் என்று நான் நம்புகிறேன். ஆனால் வளர்ச்சிப் பாதையில் செல்லும்போது பிற நாடுகளைப் பின்பற்றக் கூடாது. அப்படி பின்பற்றினால் நம்மால் வளர இயலாது” என்று கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.