அப்பாவி ஆட்டை வெட்டி இருக்கிறார்கள் … திமுகவினர் முடிந்தால் என் மீது கை வையுங்கள்… அண்ணாமலை கருத்து..!

ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்; திமுகவினர் என் மீது கை வைக்கட்டும்.’ என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை தேர்தல் முடிவுகள், அதிமுக- பாஜக கூட்டணி உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

 

ஆடு வெட்டப்பட்டு அதன் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்படுவது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,’நடுவெளியில் ஆட்டை வெட்டுவது, கொடூரமாக அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்கலாம். வெட்டுவதாக இருந்தால் என்மீது கை வைக்கலாம். திமுக-காரனுக்கு அவ்வளவு கோபம் இருந்தால், வாய் பேச முடியாத ஆட்டை விட்டுவிடுங்கள். நான் கோயம்புத்தூரில்தான் இருக்க போகிறேன். இதுதான் என்னுடைய ஊர். கரூர் அருகில்தான் நான் விவசாயம் பார்த்துகொண்டிருக்கிறேன். இந்தக் கட்சியின் தொண்டனாக இருக்கிறேன். நான் எங்கு இருக்கிறேன் என்று எல்லாருக்கும் தெரியும். அண்ணாமலை மீது கைவைக்க வேண்டும் என்று ஆசையிருந்தால் என் மீது கை வையுங்க. அப்பாவி ஆட்டை விட்டுவிடுங்கள்! வாய் பேசாத ஆட்டை நடுரோட்டில் தலையை வெட்டி, இரத்தம் வெளிவருவதை ஏன் படமாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகிறீர்கள்? இதெல்லாம் தேவையில்லாத வேலை.’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணி பிரிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என்று எஸ்.பி. வேலுமணியின் கருத்து பற்றி அவரிடம் கேட்டதற்கு,’ எடப்பாடி பழனிசாமி வேலுமணிக்கு இடையே உட்கட்சி பிரச்சனை இருப்பது போல தெரிகிறது. அதிமுகவை மக்கள் நிராகரித்துவிட்டனர். அதுதான் தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு தரும் பாடம்.’ கூட்டணி பிரிந்தபிறகு வேறு காரணங்கள் சொன்னார்கள். நிர்பந்திக்கப்பட்டு சில சட்டங்களுக்கு ஆதரவு அளித்தோம் என்று சொன்னார்கள். இப்போது பா..ஜ.க. இருந்திருந்தால் வென்றிருப்போம் என்று சொல்வது உட்கட்சி பிரச்சனை இருப்பதாக தெரிகிறது. அதிமுகவின் அரசியலை வேண்டாம் என்று மக்கள் நினைக்கிறார்கள். சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார்கள். கூட்டணியில் இருக்கும்போது ஒரு பேச்சு. பிரிவிற்கு பிறகு வேறொரு பேச்சு என்றிருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளர்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.