பாஜகவின் புதிய தேசிய தலைவர் ஆகிறாரா சிவராஜ் சிங் சவுகான்… டெல்லியில் ஆலோசனை..!

டெல்லி: பாஜகவின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க பாஜ தயாராகி உள்ளது. இதற்காக கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ளது. நாளை மறுதினம் 3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். பாஜகவின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் ஜே.பி.நட்டா இல்லத்தில், அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், பாஜக தேசிய செயலாளர் வினோத் தாவ்டே பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. பாஜக கட்சி விதிப்படி, கட்சித் தலைவரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள். 2023 ஜனவரியில் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில் மக்களவை தேர்தலையொட்டி மேலும் ஓராண்டுக்கு பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாஜகவின் தேசிய தலைவராக பதவி வகித்து வரும் ஜே.பி.நட்டாவின் பதவிக் காலம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது.