கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.1 கோடியே 6 லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர்- அதிகாரிகள் தீவிர விசாரணை.!

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பள்ளிவாசல் தெருவில் மூக்குப்பீறி கூட்டுறவு நகர வங்கி கிளை உள்ளது. இங்கு சுற்று வட்டார மக்கள் தங்களது நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். இந்த வங்கியில் கூட்டுறவு அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபட்டனர். இதில், வங்கியில் சில வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகைகளை அடமானம் வைத்து கடன் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குனர் லதா, துணை பதிவாளர் சந்திரா, சார்பதிவாளர் பொன்செல்வி உள்ளிட்ட குழுவினர் கடந்த 2 நாட்களாக குரும்பூரில் உள்ள முக்குப்பீறி கூட்டுறவு நகர வங்கி கிளையில் விசாரணை மேற்கொண்டனர். இதில், வங்கியில் மொத்தம் 36 பேர் பெயரில் 388 பவுன் போலி நகைகளை அடகு வைத்து ரூ.1 கோடியே 6 லட்சம் கடன் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இதற்கு உடந்தையாக இருந்த நகை மதிப்பீட்டாளர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்..