சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெறுகிறது.
3-வது நீதிபதி கார்த்திகேயன் இன்றும் நாளையும் இந்த மனுவை விசாரிக்கிறார்.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்த போது, இரு நீதிபதிகள் அமர்வில், எந்தெந்த கருத்துக்களில் இரு நீதிபதிகளும் முரண்பட்டுள்ளனர் என்பது குறித்து மேகலா தரப்பிலும், அமலாக்கத் துறை தரப்பிலும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் இது சம்பந்தமாக வாதங்களை முன்வைக்க அவகாசம் வழங்க வேண்டும் என மேகலா தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, வழக்கில் இறுதி முடிவெடுக்க இந்த அம்சம் குறித்து வாதம் செய்யலாம் எனத் தெரிவித்த நீதிபதி, செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா?; நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்த பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா?; செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை, நீதிமன்ற காவல் காலமாக கருதலாமா? கூடாதா? என மூன்று கேள்விகளை தீர்மானித்து, விசாரணையை ஜூலை 11, 12ம் தேதிகளுக்கு தள்ளிவைத்தார். அதன்படி இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற உள்ளது. இந்த வழக்கில் இன்று காரசார வாதங்கள் இரு தரப்பிலும் முன்வைக்கப்படும் என தெரிகிறது..