லிப்ஸ்டிக் எல்லாம் ஒரு காரணமில்லை… தபேதார் மாதவி பணியிட மாற்றம்… மேயர் அலுவலகம் விளக்கம்.!!

மிழகத்தின் தலைநகர் சென்னை மாநாகராட்சி மேயர் பிரியாவின் தபேதார் மாதவி. இவர் மேயர் பிரியாவை காட்டிலும் பளிச்சிடும் வண்ணத்தில் லிப்ஸ்டிக் பூசியதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் சென்னை மேயரின் தபேதார் மாதவி லிப்ஸ்டிக் விவகாரத்தால் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பணியை சரிவர செய்யாத காரணத்தால் மெமோ கொடுக்கப்பட்டு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மேயர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.சென்னை மாநகராட்சியின் 49வது மேயர் பிரியா. இவர் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியின் 74 வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்று மிக இளம் வயது மேயராக 29 வயதில் சென்னை மாநகராட்சியில் மேயராக நியமிக்கப்பட்டுள்ளார். மேயர் பிரியா, கொரோனா மற்றும் மழை வெள்ள பேரிடர்களில் நள்ளிரவிலும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பணி செய்து பாராட்டுக்களை பெற்று வருபவர். மாநகராட்சி மேயர் பதவி என்பது தமிழகத்தின் உயரிய பதவிகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. சென்னை உட்பட பல்வேறு மாநகராட்சிகளின் மேயர்களுக்கு செங்கோலும் தங்கப்பதக்கமும் அணிவிக்கப்படுகிறது.இதே போல மாவட்ட ஆட்சியர்கள், நீதிபதிகளுக்கு இருப்பது போல செங்கோல் தாங்குபவரும், தபேதாரும் நியமிக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. சென்னை மாநகராட்சி மேயராக பிரியா தேர்ந்தெடுக்கப்பட்ட போது முதல் பெண் தபேதாரராக மாதவி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் திடீரென அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மேயருக்கு முன்னே செங்கோலை ஏந்தியும் கூட்ட நெரிசல் இல்லாமல் வழி ஏற்படுத்தி தருவதும் தான் தபேதாரின் பணி. இந்நிலையில் மாதவி உதட்டில் லிப்ஸ்டிக் பூசும் பழக்கம் இருந்ததால் அதனை பயன்படுத்தக் கூடாது என அறிவுரை வழங்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.