அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி திருச்சியில் எடப்பாடி பேட்டி…

திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏவும் வடக்கு மாவட்ட அவை தலைவர் மாநகர பிரின்ஸ் தங்கவேல் மாரடைப்பால் கடந்த வாரம் மரணம் அடைந்தார் இவரது திருவுருவ படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முசிறியில் உள்ள பிரின்ஸ் தங்கவேல் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவரது குடும்பத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் கூறினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சென்னை, தூத்துக்குடி கனமழை குறித்து வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தும், முன்னெச்சரிக்கை விடுக்கப்படாததால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.
முன்னெச்சரிக்கை விடுக்கப்படாததால் மனித உயிர்கள், கால்நடைகளை இழந்துள்ளனர். அதிமுக செய்திகளை ஊடகங்கள் புறக்கணிக்கின்றன. தமிழக மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அதனை கருத்தில் கொள்ளாமல், இந்தியா கூட்டணியில் பங்கேற்பதற்காக டெல்லி சென்று விட்டார். ஏற்கனவே உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதில் எந்த பயனும் ஏற்படவில்லை.
ஏற்கனவே அதிமுக ஆட்சி காலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதன் மூலம் முதலீட்டாளர்கள் முதலீடு ஈர்க்கப்பட்டது. தற்போது மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டினால் பயன் ஒன்றும் கிடைக்காது. திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு தொழிற்சாலைகள் உருவாக்கப்படவில்லை.
திருச்சி முக்கொம்பு மழை, வெள்ளம் காரணமாக கொள்ளிடம் பாலம் இடிந்தது. எனவே, அதிமுக ஆட்சிக்காலத்தில் புதிய பாலம் கட்டப்பட்டது. ஆனாலும் இதுநாள் வரையில் அதிகாரப்பூர்வமாக பாலம் திறப்பு விழா நடைபெறவில்லை. புதிய பாலத்தை திறந்தால் உங்களுக்கு (ஸ்டாலினுக்கு) ஆபத்து எற்படும் என ஜோசியர்கள் எச்சரித்து இருப்பார்கள். அதன் காரணமாகவே பாலம் திறக்கப்படவில்லை என தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பேசினார் எடப்பாடி.
விஜயகாந்த் மறைவை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் திரண்ட மக்கள் அக்கட்சியின் வாக்கு சதவிகிதம் அதன் பலம் என கருதலாமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடியார், தேமுதிக கட்சியின் தலைவராகவும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராகவும், நடிகராகவும் விளங்கிய விஜயகாந்த் மறைவிற்கு மக்கள் வந்துள்ளனர். ஒரு தலைவருக்கு கிடைக்கக்கூடிய, கிடைத்த ஒரு மரியாதை, அது குறித்து விமர்சிக்கக்கூடாது. இந்த நேரத்தில் இது பொறுத்தமற்ற கேள்வி” எனத் தெரிவித்தார்.
நிகழ்வில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி, மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட்ஜான், அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல், முன்னாள் தமிழக அரசின் கொரோடா மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சின்னசாமி, சிவபதி, வளர்மதி, பூனாட்சி, அண்ணாவி, சேலம் மாவட்ட செயலாளர் இளங்கோவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திராகாந்தி, மல்லிகா சின்னசாமி, செல்வராஜ், பொறியாளர் இப்ராகிம்ஷா, ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.