டெல்லி: தமிழ் ரசிகர்களால் இசைஞானி என்று கொண்டாடப்படுபவர் இளையராஜா. 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவர் இப்போது இளம் இசையமைப்பாளர்களுக்கு டஃப் கொடுத்துவருகிறார்.
இதற்கிடையே தன்னுடைய பாடல்களை படங்களில் பயன்படுத்துவதை அவர் சமீப காலமாக விரும்புவதில்லை. அதற்காக நீதிமன்றமும் சென்றிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் இசையமைத்த என் இனிய பொன் நிலாவே பாடலின் காப்புரிமை அவருக்கு சொந்தம் கிடையாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா 50 வருடங்களாக தனது இசை பயணத்தை தொடர்ந்துவருகிறார். எந்தத் தலைமுறையாக இருந்தாலும் அவரது இசையை கொண்டாடாமல் இருக்க முடியாது. அவரது இசையமைப்பில் கடைசியாக விடுதலை 2, ஜமா ஆகிய இரண்டு படங்கள் வந்தன. இரண்டு படங்களுக்குமே அவர் தனது சிறந்த இசையை வழங்கியிருந்தார். பலரும் அவரது இசையை ரசிக்கத்தான் செய்தார்கள். மேலும் அடுத்தடுத்தும் அவர் இசையமைப்பதில் பிஸியாக இருக்கிறார்.
இதற்கிடையே இளையராஜா இசையமைத்த பாடல்களை பிற படங்களில் பயன்படுத்தும் வழக்கம் தமிழ் சினிமாவில் உண்டு. ஆனால் அவரோ தன்னிடம் அனுமதி கேட்பதே இல்லை என்று கூறுவார். மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ், தமிழில் வெளியான 96, மெய்யழகன் உள்ளிட்ட பல படங்களின் காட்சிகளில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் பயன்படுத்தப்பட்டதற்காக நீதிமன்றமும் சென்றார் இளையராஜா.
அதேபோல் தன்னுடைய பாடல்களை தனது அனுமதியின்றி மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடினார் என்றும் வழக்கு தொடர்ந்திருந்தார் ராஜா. இப்படி இளையராஜாவுக்கும் காப்புரிமைக்கும் ஏகப்பொருத்தமாகத்தான் இருக்கும். இந்தச் சூழலில் ஜீவா நடித்திருக்கும் திரைப்படம்தான் அகத்தியா. படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்துக்கு இளையராஜாவின் இரண்டாவது மகன் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அகத்தியா படத்தில், இளையராஜா ஏற்கனவே இசையமைத்த, ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலை யுவன் ஷங்கர் ராஜா ரீ க்ரியேட் செய்திருக்கிறார். இதுதொடர்பாக சரிகமா நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் வேல்ஸ் நிறுவனமோ இளையராஜாவின் அனுமதியோடுதான் இந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறியது. சூழல் இப்படி இருக்க இந்தப் பாடலின் காப்புரிமை இளையராஜாவிடம் இல்லை தங்களிடம்தான் இருக்கிறது என்று சரிகமா நிறுவனம் வாதாடியது.
மேலும் அந்த நிறுவனத்தின் சார்பில் ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. ஆதாரங்களை பார்த்த நீதிமன்றம் என் இனிய பொன் நிலாவே பாடலின் உரிமை சரிகமா நிறுவனத்திடம் இருப்பதால் அந்தப் பாடலை இன்னொருவருக்கு இளையராஜா ஒதுக்க அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டிருக்கிறது. இதற்கிடையே அகத்தியா திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஜீவாவுடன் அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.