காருக்குள் போலீஸ் ஏட்டு மர்ம மரணம்..

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகையை அடுத்துள்ள ஆலங்கொம்பு வீராசாமி நகரை சேர்ந்தவர் சசிகுமார் ( வயது 44) இவர் நீலகிரி மாவட்டம் லவ்டேல் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சபிதா (வயது 34) ) தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார் .கடந்த 1-ந் தேதி அதிகாலை சசிகுமார் வெளியே சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு காரில் புறப்பட்டார். வெளியே சென்று அவர் காலை 6 மணிக்கு தனது மனைவி சபிதாவிடம் செல்போனில் பேசினார் .அதன் பின்னர் சபிதா மற்றும் குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட்டனர் .பள்ளி விட்டு மாலை 5 – 30 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்த போது சசிகுமார் வீட்டுக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது .இதை தொடர்ந்து சபிதா அக்கம் பக்கம் விசாரித்தும், தேடியும் , எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இரவு சுமார் 9 மணிக்கு சிறுமுகை போலீசார் சபிதாவுக்கு போன் செய்து சிறுமுகை வெள்ளி குப்பம்பாளையம் பெட்ரோல் பங்க் அருகில் சசிகுமார் காரில் உட்கார்ந்து படி மயங்கி கிடப்பதாக தகவல் தெரித்தனர். சபீதாவும், அவரது மகனும் சென்று பார்த்த போது அவர் காரில் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சசிகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது இறப்புக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.