நயினார் நாகேந்திரன் திமுகவில் சேருகிறாரா..? திருச்சி சூர்யா தகவல்..!

பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநிலத் தலைவர் பதவியை மாற்றுவார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் பழைய தலைமையே தொடரும் என்று அறிவிப்பார்கள். சில மாநிலங்களில் யார் எல்லாம் மீண்டும் பதவியில் தொடரப் போகிறார்கள் ஒரு பட்டியலைக் கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது. அதில் தமிழக மாநிலத் தலைவர் பெயர் இல்லை. மேலிடத் தலைமைப் பொறுப்பாளராக அரவிந்த் மேனனை போடக் கூடாது என மாநிலத் தலைவர் தலைகீழாக நின்று பார்த்தார். அதை மீறி அவரையே பொறுப்பாளராகக் கட்சி நியமித்துள்ளது. அதில் அப்செட் ஆகிவிட்டார்.
அதேபோல நயினார் நாகேந்திரன் தேர்தலில் வெற்றி பெற்று இருப்பார். அவர் வெற்றி பெற்றிருந்தால், அவரைக் கட்சித் தலைமை மத்திய அமைச்சராகி இருக்கும். அவரை வரவிடாமல் செய்தவர் இவர்தான். இவரே நயினாருக்கு எதிராகச் செய்திகளை வெளிவர வைத்தார். 400 கோடி பணம் அவருடையதுதான் என இவர்தான் வதந்தியைக் கிளப்பிவிட்டார்.
அதேபோல கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக இருந்து அங்கே சிடி ரவிக்கு எதிராக வேலைகள் செய்தார். அவர் கர்நாடக தேர்தலில் தோற்றவுடன் அவரை மேலிடத்தில் சொல்லி மாற்றிவிட்டார். நல்லவேளையாக இப்போது அரவிந்த மேனனை கட்சி பொறுப்பாளராக நியமித்துவிட்டது. அதனால் இப்போது ‘அவருக்கு’ பிரச்சினை வந்துவிட்டது. அரவிந்த் மேனன் பாஜக மூத்த தலைவர்கள் மீதுதான் அதிக மரியாதை வைத்துள்ளார். குறிப்பாக பொன் ராதாகிருஷ்ணனுக்கு அவரிடம் செல்வாக்கு அதிகமாக உள்ளது. இப்போது இருப்பவர் திடீரென்று கட்சிக்குள் வந்தவர். அதனால் மதிப்பதில்லை. ஆகவே இவருக்கு மேனனை பிடிக்கவில்லை. இப்போது மாநிலத் தலைமையை மாற்ற வேண்டும் என்பதில் தேசிய தலைமை உறுதியாக உள்ளது. பொன்னாரை மீண்டும் பதவிக்குக் கொண்டுவரலாம் என மேனன் நினைக்கிறார். அமித்ஷா மூலம் தமிழிசை லாபி செய்கிறார்.
இந்த இருவரும் பழைய தலைவர்கள். புதிய ஆட்களுக்குப் பதவி தரவேண்டும் என நினைக்கிறார்கள். அதற்கு கண்முன்னால் உள்ள ஒரே வாய்ப்பு நயினார் நாகேந்திரன் தான். ஆனால், நயினார் தனக்குப் பதவியே வேண்டாம் என்பதில் உறுதியாக நிற்கிறார். அமித்ஷா, நட்டா வரை பேசியும் அவர் மசியவில்லை. ஏனென்றால் அவர் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் கையை மீறி செலவு செய்துவிட்டார். அவரது சொத்துகளைக் கூட அடமானம் வைத்து செலவு செய்துள்ளார். அவரது பணம் ரெய்டில் மாட்டிக் கொண்டுவிட்டது. அவர் தோற்றுவிடுவோம் என இறுதிவரை நம்பவே இல்லை. கடைசியில் சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர் செய்த சதியால் தோல்வி அடைந்துவிட்டார். இப்போது அவரிடம் பணம் இல்லை.
அடுத்து 2026இல் அவர் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்றால் பணம் தேவை. அதற்கு பாஜக மாநிலத் தலைவராகிவிட்டால் அதற்குச் செலவு செய்யப் பணம் வேண்டும். ஆகவே அவர் உஷாராக மறுத்துவருகிறார். நயினார் தனக்கு வயதாகிவிட்டதால் மகனுக்கு பாஜகவில் பதவி கேட்கிறார். ஆனால் வாரிசு அரசியலைக் காரணம் காட்டி மாநிலத் தலைவர் பதவி கொடுக்க மறுக்கிறார். இந்தக் குழப்பத்தில்தான் அவர் கட்சி மாறலாம் என்ற முடிவை எடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ஐவர் குழுவில் ஒருவராக இடம் தருவதாகப் பல ஆண்டுகளாக நயினாரை அழைத்து வருகிறார். ஆனால், இவர் போகவில்லை. நாளை சசிகலா அதிமுகவுக்குள் வந்தால் நயினாருக்குப் பிரச்சினை. இந்நிலையில்தான் திமுகவுக்குப் போக இவர் திட்டமிட்டு வருகிறார். அங்கே மகனுக்கும் பதவி வாங்கிவிடலாம் பிரச்சினை இருக்காது என நினைத்துள்ளார் என்று சூர்யா பேசியுள்ளார். திருச்சி சூர்யாவின் பேச்சு அரசியல்வாதிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.