நியூஸ் எக்ஸ்பிரஸ்” செய்தியின் எதிரொலி… நிம்மதி பெருமூச்சு விடும் புதூர் கிராம மக்கள்.!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கோட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் சுமார் 500 -க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தில் சாக்கடை நீர் செல்வதற்கு போதிய வழியில்லாமல் தேக்கம் அடைந்து பல வீடுகளின் வாசலில் தேங்கி கிடக்கிறது. இதனால் சிலர் நோய் வாய்ப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் சம்பந்தப்பட்ட புதூர் கிராமத்திற்கு நியூஸ் எக்ஸ்பிரஸ் நாளிதழ் சார்பாக கள ஆய்வு செய்து 29/06 2024 நேற்று செய்திகள் வெளியிட்ட நிலையில் கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தா கரிகால பாண்டியன் உத்தரவின் பேரில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வுகள் செய்து சாக்கடையை சுத்தம் செய்து கழிவுநீர் நிரந்தரமாக கடந்து செல்வதற்கு உண்டான ஏற்பாடுகளையும் உடனுக்குடன் செய்தனர்.

இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய கோட்டூர் ஊராட்சி செயலாளர் பாண்டியராஜன் கூறுகையில்; நமது நிர்வாகத்தின் சார்பாக தொடர்ந்து புதூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொண்டு தான் இருக்கிறோம் இனி வரும் காலங்களில் சாக்கடை பிரச்சனைகள் இல்லாமலும் பார்த்துக் கொள்வோம் அதுமட்டுமின்றி சாக்கடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என கூறினார்.

மேலும் புதூர் கிராம ஊர் முக்கியஸ்தர்கள் நாகூர் மீரான், நூர் முகம்மது, சரபாத் அலி, இத்ரீஸ் அலி,ஜியாவுல் சேட், சிக்கந்தர் அலி,இனாயத் அலி, தக்பீர் அலி, ஃபயாஜ், ஆகியோர் கூறியதாவது;

இந்த புதூர் கிராமத்தின் நீண்ட கால பிரச்சனையாக இந்த சாக்கடை பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் நியூஸ் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டதன் காரணமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நீண்ட கால பிரச்சனையை ஒரே நாளில் முடித்து தந்துள்ளனர். ஆகவே நியூஸ் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு ஊர் ஜமாத் சார்பாகவும் அனைத்து கட்சியின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறினர்.