கல்குவாரிகள் அமைக்க எதிர்ப்பு… அரசு பஸ்களை மறித்து பொதுமக்கள் சாலை மறியல்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை ஊராட்சி ஒன்றியம் பெள்ளாதி, சிக்காரம்பாளையம் ஊராட்சியில் 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள், தார் உற்பத்தி தொழிற்சாலை உள்பட 15-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.

இந்த நிலையில் பெள்ளாதி மொங்கம்பாளையம் கிராமம் குடியிருப்பு பகுதிகளில் புதிதாக 4 கல்குவாரிகள், சிக்காரம் படியனூர் கிராமத்தில் ஒரு கல்குவாரி என 5 கல்குவாரிகள் அமைக்க கனிமவளத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
ஓரிரு நாட்களில் கல்குவாரி அமைப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளது. இதனால் சின்ன படியனூர், பெரிய படியனூர், சின்ன வடவள்ளி, வடவள்ளி, பொகலூர், பேரம்பாளையம், குமரன்குன்று, தென் பொன்முடி, பஞ்சனூர், தாத்தம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலை தேரம்பாளையம் பகுதியில் திடீரென அரசு பஸ்களை மறித்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

இந்த தகவலை அறிந்து காரமடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் சாலை மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கல்குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. நேரம் காலம் பார்க்காமல் வெடி வெடிப்பதால் வீடுகள் சேதம் அடைந்து வருகிறது. மேலும் காற்று மாசு அடைந்து நுறையிரல் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. கண்பார்வை பாதிக்கப்பட்டு விவசாய நிலங்கள் பாதிப்படைந்து வருகிறது. இந்த பிரச்சினைகளால் பாராம்பரியமாக வாழ்ந்து மக்கள் ஊரை காலி செய்து செல்கின்றனர் என்றனர்.
அவர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் நடத்தி வருகின்றனர். சாலை மறியலால் அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வரும் பஸ்கள் குமரன் குன்று வழியாகவும், மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் வரும் பஸ்கள் 4 ரோடு வழியாக காரமடைக்கும் போலீசார் பஸ்களை திருப்பி விட்டனர்.