மக்கள் குறைதீர்க்கும் முகாம் – எஸ்.பி கார்த்திகேயன் தலைமையில் நடந்தது..!

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.போலீஸ் சூப்பிரண்டு டாக்டர்.கார்த்திகேயன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில் குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 86 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில்,4 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை ( எப்.ஐ .ஆர் ) பதிவு செய்யப்பட்டும் , 73 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 13 மனுக்கள் மீது மே‌ல்விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீர்வு காணப்பட்டது. இந்த மக்கள் குறை தீர்ப்பு மனு நாளில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டனர்..