டீயில் மயக்க மருந்து கொடுத்து பெண் கட்டிடக்கலை நிபுணர் பலாத்காரம் – பிசியோதெரபிஸ்ட் கைது.!!

கோவை அருகே உள்ள மருதமலை அடிவாரம், ஐ.ஒ.பி. காலனி, திரு.வி.க நகரை சேர்ந்தவர் அனந்த கிருஷ்ணன் ( வயது 68) பிசியோதெரபிஸ்ட். இவருக்கு சமூக வலைதளத்தின் மூலம் 23 வயதான இளம்பெண் அறிமுகமானார் .அவர் கட்டிடக்கலை நிபுணர் . அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததை அடுத்து அவர்கள் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நேரில் சந்தித்து பேசினர். அப்போது அனந்த கிருஷ்ணன் தனது வீட்டை நேரில் பார்வையிட்டு புதுப்பித்து கட்டித்தர வேண்டும் என்று அந்த இளம் பெண்ணிடம் கூறியுள்ளார் . அதன் பேரில் அந்த இளம்பெண் அவருடைய வீட்டிற்குச் சென்றார். அப்போது வீட்டில் யாரும் இல்லை அந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவர் அந்த இளம் பெண்ணுக்கு டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்ததும் இளம்பெண் மயங்கிவிட்டார் .இதையடுத்து அனந்த கிருஷ்ணன் அந்தஇளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார் .இது குறித்து அனந்தகிருஷ்ணனிடம் கேட்டபோது வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினாராம். இது குறித்து அந்த இளம்பெண் கோவை மேற்கு பகுதி அனைத்து மகளீர் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் முறைப்படி எந்த விசாரணையும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இளம்பெண் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இளம் பெண்ணின் புகார் தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி கோவை மாநகர போலீசாருக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது . இதையடுத்து உதவி கமிஷனர் கரிகால் பாரி சங்கர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. உடனே தேனி மாவட்டம் குமுளி பகுதியில் தலைமறைவாக இருந்த அனந்தகிருஷ்ணனை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் கோவைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்..