அதி தீவிர புயலாக வலுப்பெற்ற ‘பிப்பர்ஜாய்’ நாளை மறுநாள் கரையை கடக்கும்..!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய புயல் `பிப்பர்ஜாய்’ வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஜூன் 12ம் தேதி (நேற்று) அதிகாலை அதிதீவிரப் புயலாக வலுப்பெற்று, மும்பையில் இருந்து 560 கி.மீ.தொலைவிலும், குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 460கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது மேலும் வலுப்பெற்று வரும் 14-ம் தேதி வடக்கு திசையிலும், பின்னர் வடகிழக்கு திசையிலும் நகர்ந்து சவுராஷ்டிரா- ட்ச்வளைகுடா மற்றும் அதையொட்டிய பாகிஸ்தான் கடற்கரைப் பகுதிகளில் வரும் 15-ம் தேதி காலை 11.30 முதல், பிற்பகல் 2.30 மணியளவில் மிக தீவிரப் புயலாக மாறி, குஜராத் மாநிலம் மாண்டிவி, பாகிஸ்தான் கராச்சி கடற்கரைப் பகுதிகளைக் கடக்கும். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 135 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 150 கி.மீ. வேகத்திலும் இருக்கக்கூடும்.

அதனால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பிபர்ஜாய் புயல் காரணமாக குஜராத்தின் கட்ச் மற்றும் கடலோரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்புயல் கரையை கடக்கும் வரை அம்மாநிலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜூன் 16ஆம் தேதி வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் தென்மேற்குப் பருவமழை பரவியுள்ளது. மேற்கு திசைக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை சில இடங்களிலும், 16-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும். சில இடங்களில் வழக்கத்தைவிட 7 டிகிரிஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும்.