வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் பிரதமர் மோடி.!!

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த மாதம் 19ஆம் தேதி 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவும், 89 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், 94 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 7ஆம் தேதியும், நான்காம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 13ஆம் தேதியும் நடைபெற்று முடிந்துள்ளது.

அடுத்தடுத்தக்கட்ட தேர்தல்கள் வரும் வாரங்களில் நடைபெறவுள்ளன. ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

பிரதமர் மோடி அம்மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் இருந்தே இந்த முறையும் போட்டியிடுகிறார். அதற்காக அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளார். இதன்போது, மத்திய அமைச்சர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் பிரதமருடன் செல்லவுள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து ஜி.கே.வாசன், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வாரணாசி சென்றுள்ளனர். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல்வேறு பாஜக கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் வாரணாசி சென்றுள்ளனர். பிரதமர் மோடி வேட்புமனுத்தாக்கல் செய்த பிறகு அங்கு நடைபெறவுள்ள பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டு பிரதமருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பார்கள் என தெரிகிறது.

முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தச அஸ்வமேத காட் பகுதியில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். வேத மந்திரங்கள் முழங்க, கங்கைக் கரை படித்துறையில் ஆரத்தியும் எடுத்தார். தொடர்ந்து அங்குள்ள கால பைரவர் கோயிலிலும் பிரார்த்தனை செய்ய உள்ளார். அதனைத் தொடர்ந்தே வேட்புமனுத் தாக்கல் செய்தார்..