திருச்சி ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் பதியவிட்ட கல்லூரி மாணவிகள் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு.!!

திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் மூன்று இளம் பெண்கள் கவர்ச்சி உடையில் நடனமாடி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர் .இது மட்டுமின்றி இதே பெண்கள் தெருக்களிலும் கவர்ச்சி நடனமாடி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில் இதனைப் பார்த்த பலரும் ரயில் நிலையத்தில் நடனமாட எப்படி அனுமதி கிடைத்தது, அனுமதி கொடுத்தது யார் என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் குறிப்பாக பேருந்து, ரயில் மற்றும் விமான நிலையம் போன்ற பொதுஇடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக நடனம் மற்றும் நாடகம் போன்றவை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை அனுமதி பெற்று நடத்தப்படுவது வழக்கம்.ஆனால், பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள ரயில் நிலையத்தில் நடனமாட அனுமதி பெற்றார்களா அல்லது அனுமதி பெறாமல் இவர்களாகவே நடனம் ஆடினார்களா என்பது தெரியவில்லை. சாதாரணமாக இந்த பெண்கள் ரயில் நிலையத்தில் எப்படி கவர்ச்சி நடனம் ஆடினார்கள் என்று தெரியவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுப்பினர்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பானதை அடுத்து திருச்சி கோட்டை ரயில்வே போலீசார் ஆக்‌ஷனில் இறங்கினர். ரயில் நிலையத்தில் நடனம் ஆடிய 3 பெண்கள் மற்றும் அதனை வீடியோ ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். பொது மக்களுக்கு இடையூறு செய்வது மற்றும் பொது இடத்தில் அனுமதி இன்றி கூட்டத்தை சேர்ப்பது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நான்கு பேருக்கும் தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் இதுபோன்ற செயல்களில் மீண்டும் ஈடுபடக் கூடாது என எச்சரித்து அனுப்பினர். கல்லூரியில் படிக்கும் மாணவிகளே இப்படி செய்தால் என்ன செய்வது என்று பொதுமக்கள் குமுறுகின்றனர். ஆண் பெண் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளை அந்தக் கல்லூரி நிர்வாகம் இது போன்ற கலாச்சார சீர்கேடான செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அறிவுரை சொல்ல வேண்டும் என்றனர்.