ஓய்வு பெற்ற உடற்பயிற்சி ஆசிரியரிடம் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்ட கோவை கருவூல அதிகாரி… கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு துறை.!

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர் . இவர் கோவையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி கடந்த மாதம் ஓய்வு பெற்றார். பின்னர் அவர் அரசிடம் இருந்து தனக்கு கிடைக்கும் பணிக்கொடை ( கிராஜுட்டி) தொகையை பெற விண்ணப்பிக்க கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலக அலுவலகத்திற்கு சென்றார் .அங்குள்ள கல்வி பிரிவில் இருந்த அதிகாரி ராஜா என்பவரை அணுகினார். அவர் பணிக்கொடையை அரசிடமிருந்து பெற்றுக் கொடுக்க ரூ 2 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சத் தொகையை கொடுக்க விரும்பாத சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர் இது குறித்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் ரசாயன மை தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதை கருவூல அதிகாரி ராஜாவிடம் கொடுக்கச் சொன்னார்கள். அதன்படி நேற்று சீரியல் ஆரோக்கியம் அலெக்சாண்டர் கருவூல அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள கல்வி பிரிவில் இருந்து அதிகாரி ராஜாவிடம் அந்த ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். அதை வாங்கிய மேஜை டிராயரில் போட்டதும் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் ரு 2 ஆயிரம் லஞ்சம வாங்கியது தெரிய வந்தது .இதை தொடர்ந்து ராஜாவை கைது செய்தனர். அத்துடன் அவரது அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தினார்கள்..