கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள சொக்கம்பாளையம், திருமுருகன் நகரில் வசிப்பவர் விஜயகுமார் (வயது 45) பா.ஜ பிரமுகர். இவர் அதே பகுதியில் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். அங்குள்ள அவரது மாமனார் வீட்டிற்கு கடந்த 18 – ஆம் தேதி குடும்பத்துடன் சென்றுள்ளார்.. விஜயகுமார் இடம் வாங்குவதற்காக வைத்திருந்த ரூ 18 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் 9 சவரன் தங்க நகைகள் பீரோவில் இருந்தது. திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 18 லட்சத்து 50 ஆயிரம் பணம் மற்றும் 9 சவரன் தங்க நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து விஜயகுமார்(45) அன்னூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் . இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியை விரைவாக கைது செய்யும் பொருட்டு கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரி உத்தரவின் பேரில், கோவை சரக டி .ஐ .ஜி .சரவண சுந்தர், அறிவுறுத்தலின் பேரிலும், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மேற்பார்வையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. குற்றவாளியை தேடி விசாரணை மேற்கொண்டும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டும் தீவிர புலன் விசாரணை செய்ததன் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் அன்பு என்ற அன்பரசன் (வயது 33) என்பவர் மேற்படி வீடு புகுந்து திருடிய குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்து, தனிப்படையினர் அன்பரசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், உறவினர் வீட்டிற்கு வந்த அன்பரசன் உறவினரது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு, பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு மேற்படி குற்ற செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவரிடமிருந்து திருடிய சொத்துக்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன. மேலும் மேற்படி அன்பரசன் மீது பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 18 குற்ற வழக்குகள் உள்ளன.
மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படை காவல்துறையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், பாராட்டி, நற் சான்றிதழ் வழங்கினார். இந்த வழக்கில் ரூ 1 கோடியே 50 லட்சம் கொள்ளை போனதாக கூறிய பா.ஜ பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.