ரூ.1.75 கோடி போலி பேரிங்குகள் பறிமுதல் – கோவை கடைகள், குடோனில் போலீசார் அதிரடி சோதனை..!

கோவை: தொழில் நகரமான கோவையில் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. அங்கு தயாரிக்கப்படும் பல்வேறு வகையான பொருட்கள் மற்றும் எந்திரங்கள் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது .இந்த நிலையில் கோவை காட்டூர் பகுதியில் உள்ள கடைகளில் தனியார் நிறுவனத்தின் பெயரில் போலி பேரிங்குகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக சம்பந்தப்பட்ட நிறுவனம் சார்பில் காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் ராம்நகர், நேரு வீதி, நஞ்சப்பா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 3 கடைகளில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கப்பட்ட போலி பேரிங்குகள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.  மேலும் அந்த கடை உரிமையாளர்கள் 3 இடங்களில் குடோன் அமைத்து பேரிங்குகளை தயாரித்து அதில் பிரபல நிறுவனத்தின் ஸ்டிக்கரை ஒட்டி விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 3 கடைகள் மற்றும் 3 குடோனில் இருந்த 40 ஆயிரம் போலி பேரிங்குகளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- கோவை காட்டூரில் சோதனை நடத்தி ரூ 1 கோடியே 75 லட்சம் மதிப்புள்ள போலி பேரிங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன . அதை தயாரிக்க பயன்படுத்திய எந்திரங்களை பறிமுதல் செய்துள்ளோம். 3 குடோன்கள் வைத்து பேரிங்குகள் தயாரித்து அதில் பிரபல நிறுவனத்தின் ஸ்டிக்கர் மற்றும் லோகவை அச்சிட்டு விற்பனை செய்துள்ளனர். எனவே லோகோ தயாரிக்க பயன்படுத்திய லேசர் எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்..