டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் ரூ.25 லட்சம் லஞ்சம்… மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் மீது அதிரடி நடவடிக்கை.!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பஸ் நிலையம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு சார்பதிவாளர்களாக ராமமூர்த்தி, சாந்தி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள் . இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் லஞ்சம் வாங்குவதாகவும் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையில் கோவை லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திவ்யா தலைமையில் இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள் . அங்கு சார் பதிவாளர் சாந்தி மட்டும் இருந்தார். அவரிடமும் அலுவலகத்தில் இருந்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அலுவலகம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. அத்துடன் அலுவலக வளாகத்தில் நின்ற வாகனங்களிலும் சோதனை நடந்தது. இந்த சோதனை நேற்று மாலை வரை நீடித்தது. அப்போது நடந்த விசாரணையில் சார் பதிவாளர் சாந்தி டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் ரூ.25 லட்சத்து 33 ஆயிரத்து 880 லஞ்சம் பெற்று இருப்பதும், அதை குடும்பத்தினரின் வங்கி கணக்கிற்கு மாற்றி இருப்பதும் தெரிய வந்தது. இத்துடன் இடைத்தரகராக செயல்பட்ட நவீன் குமார் என்பவர் முன்கூட்டியே லஞ்ச பணத்துடன் தப்பி ஓடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை தேடி வருகிறார்கள். இதற்கிடையில் அலுவலகஊழியர் பிரவின் குமார், சார்பதிவாளரின் டிரைவர் ராஜா ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணைக்கு பிறகு சார்பதிவாளர் சாந்தி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் பரிந்துரை செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.