மத்திய அரசு செயல்படுத்தி வரும் கைவினைத் தொழில்களுக்கான கடனுதவித் திட்டத்தில் வெறும் 5% வட்டியில் 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பலன் பெற இதுவரை 2.59 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். சுமார் 23.97 லட்சம் விண்ணப்பதாரர்களின் பதிவும் நிறைவடைந்துள்ளது.
கைவினை கலைஞர்களுக்கு மத்திய அரசு எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு, அரசு 1 லட்சம் முதல் 3 லட்சம் வரை கடன் வழங்கும். அதுவும் வெறும் 5 சதவீத வட்டி விகிதத்தில்.
மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் கைவினை கலைஞர்களுக்கு அரசாங்கம் முதலில் ரூ.1 லட்சம் கடனாக வழங்கும். இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்திய 18 மாதங்களுக்குப் பிறகு, ரூ.2 லட்சம் கூடுதல் கடனுக்குத் தகுதி பெறுவார். இரண்டு கட்டத்திலும் வட்டி விகிதம் 5 சதவீதம் மட்டுமே இருக்கும்.
இது தவிர, இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு தொழிலுக்குத் தேவையான கருவிகளை வாங்குவதற்காக ரூ.15,000 வவுச்சர் வழங்கப்படுகிறது. இந்த வவுச்சரை பயனாளிகள் தங்கள் தொழில் தொடர்பான உபகரணங்களை வாங்க பயன்படுத்தலாம்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பின், பயனாளிகளுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தில் தச்சர்கள், பொற்கொல்லர்கள், கொல்லர்கள், கொத்தனார்கள், கல் சிலைகள் செதுக்குபவர்கள், முடிதிருத்துபவர்கள் என பலவகை தொழில்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இந்தத் திட்டம் பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டம் என அழைக்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, செவ்வாய்க்கிழமை வரை இத்திட்டத்தில் பலன் பெற 2.59 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். சுமார் 23.97 லட்சம் விண்ணப்பதாரர்களின் பதிவும் நிறைவடைந்துள்ளது.