ரூ.42 கோடி கடன்… ஆன்லைனில் விஷம் வாங்கி கோவை தொழில் அதிபர் தற்கொலை – காருக்குள் பிணமாக கிடந்தவர் மீட்பு.!!

கோவை விளாங்குறிச்சியில் உள்ள எஸ். ஆர். அவென்யூவை சேர்ந்தவர் வித்யாசங்கர் (வயது 44) தொழிலதிபர் இவரது மனைவி பிந்து ( வயது 40) இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். வித்யாசங்கர் திருப்பூரில் சொந்தமாக மில் நடத்தி வந்தார். இங்கு நூல் தயாரித்து பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்தார் .மேலும் அவர் தொழிலை விரிவு படுத்துவதற்காக நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் அதிக அளவில் கடன் வாங்கி உள்ளார். மேலும் வங்கிகளிலும் நிறைய கடன் வாங்கியதாக தெரிகிறது. அந்த வகையில் அவர் மொத்தம் ரூ.42 கோடிக்கு மேல் கடன் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு கடந்த சில மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது .இதனால் வித்யாசங்கர் கடனுக்குரிய தவணைத் தொகை மற்றும் வட்டியை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதற்கு இடையே கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்ய தொடங்கினர் .ஒரு கட்டத்தில் அவரது செல்போனுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. யாரிடம் போய் உதவி கேட்பது என்று தெரியாமல் தவித்தார். இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் விஷம் ஆர்டர் செய்தார் .அந்த விஷம் 2 நாட்களுக்கு முன் கிடைத்தது. இந்த நிலையில் திருப்பூரில் மில்லுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு காரில் வித்யாசங்கர் புறப்பட்டார் .ஆனால் அவர் திருப்பூரில் உள்ள மில்லுக்கு செல்லவில்லை. அவர் கோவை தொண்டாமுத்தூர் , தேவராயபுரம்அருகே உள்ள பூதிப்பள்ளம் வந்துசாலை ஓரமாக காரை நிறுத்தினார். கதவை பூட்டிக்கொண்டு ஏற்கனவே தயாராக வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டு உள்ளே படுத்து கொண்டார். இதற்கிடையே அந்த பகுதியில் நீண்ட நேரமாக ஒரு கார் நிற்பதை பார்த்த பொதுமக்கள் அருகே சென்று பார்த்தனர். அந்த காருக்குள் ஒருவர் படுத்த நிலையில் கிடந்தார். இதனால் அவர்கள் கார் கதவை தட்டிப் பார்த்தும் திறக்கப்படவில்லை.. இதனால் சந்தேகம் அடைந்தவர்கள் தொண்டாமுத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அந்த காரின் கதவை திறந்து பார்த்தபோது வித்யாசங்கர் வாயில் நூரை தள்ளியவாறு பிணமாக கிடந்தார். அந்த காரில் விஷப்பாட்டில் இருந்தது. போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வித்யாசங்கர் காரில் ஒரு டைரி இருந்தது.அந்த டைரியில் யார் யாரிடம் எவ்வளவு கடன் வாங்கப்பட்டு இருக்கிறது? எவ்வளவு பணம் திரும்ப கொடுக்கப்பட்டிருக்கிறது. என்பது குறித்த தகவல் இருந்தது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..