திருச்சி தனியார் ஓட்டலுக்கு சத்துணவு முட்டை விற்பனை – இருவர் கைது..!

தமிழகத்தில் சத்துணவு மையங்கள் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளாகியவற்றில் சத்துணவுடன் மாணவ மாணவியருக்கு முட்டை வழங்கப்படுகிறது இந்த முட்டைகளில் அரசின் முத்திரையிடப்பட்டு இவை சத்துணவு மையங்களுக்கும் அங்கன்வாடி மையங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் துறையூர் திருச்சி சாலையில் உள்ள உணவகத்தில் சத்துணவுக்கு வழங்கப்படும் அரசு முத்திரையுடன் கூடிய முட்டைகள் உணவு தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. இது தொடர்பான வீடியோ வைரலானது.
இந்த சம்பவம் வைரல் ஆனதைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் உத்தரவின் பேரில் துறையூர் வட்டாட்சியர் தலைமையில் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர் வடிவேல் மற்றும் அதிகாரிகள் அந்த உணவகத்தில் இன்று சோதனை மேற்கொண்டனர். இதில் அந்த கடையில் பல நாட்களாக சத்துணவுக்கு வழங்கப்படும் அரசு முத்திரையுடன் கூடிய முட்டைகள் உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருவது தெரியவந்தது.
அங்கிருந்த சத்துணவு முட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த கடைக்கு சீல் வைத்தனர். அரசு சார்பில் குழந்தைகளுக்கு வழங்க அளிக்கப்பட்ட முட்டைகளை கடைக்கு விற்பனை செய்ததாக மதுராபுரி ஊராட்சி ஒன்றிய சத்துணவு அமைப்பாளர் வசந்த குமாரி (58), உணவக உரிமையாளர் ரத்தினம் (46) ஆகியோரை துறையூர் போலீஸார் கைது செய்தனர். சத்துணவு குழந்தைகளுக்கு தமிழக அரசு இலவசமாக கொடுக்கும் முட்டையை தனியார் ஓட்டலுக்கு விற்பனை செய்தது திருச்சியில் பரபரப்பை உண்டாக்கியது.