பெற்ற குழந்தையை 1 லட்சத்திற்கு விற்பனை… தாய் உட்பட 3 பெண்கள் கைது..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமி செட்டிபாளையம் சின்ன கண்ணான் புதூரை சேர்ந்தவர் ஆதி கணேஷ் (வயது 25 )இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் .இவரது மனைவி நந்தினி ( வயது 22) இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நந்தினி மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு கடந்த 14ஆம் தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது . குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக தங்களுக்கு பிறந்த பெண் குழந்தையை ஆதி கணேஷ் – நந்தினி தம்பதிகள் விற்க முடிவு செய்தனர் . இதற்காக அவர்கள் இடைத்தரகர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த தம்பதியினர் குழந்தையை விற்பனை செய்ய நினைத்து இருப்பதை அறிந்த கஸ்தூரி பாளையம் ,சத்யா நகரை சேர்ந்த இடைத்தரகர் தேவிகா (வயது 42) என்பவர் நந்தினியை அணுகினார். நந்தினியிடம் கூடலூர் கவுண்டம்பாளையம் மாந்தோப்பை சேர்ந்த மகேஸ்வரன் -அனிதா தம்பதிக்கு குழந்தை இல்லாமல் இருப்பதால் அவர்கள் உன் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆசைப்படுகிறார்கள். எனவே குழந்தையை என்னிடம் கொடு நான் அவரிடம் கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார் .இதையடுத்து நந்தினி இடைத்தரகர் தேவிகா ஆகியோர் சேர்ந்து அந்த குழந்தையை அனிதாவிடம் ரூ 1 லட்சத்துக்கு விற்பனை செய்து உள்ளனர். அதற்காக கமிஷனையும் நந்தினி மற்றும் அனிதாவிடம் தேவிகா பெற்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் இந்த “ஹெல்ப் லைன் ” மைய அதிகாரிகள் பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை பெற்ற தாய் நந்தினி, இடைத்தரகராக செயல்பட்ட தேவிகா அந்த குழந்தையை வாங்கிய அனிதா ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர் .அத்துடன் அந்தப் பெண் குழந்தையும் மீட்டனர். தொடர்ந்து இதுபோன்று தேவிகா யாரிடமாவது குழந்தையை வாங்கி விற்பனை செய்து உள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.