அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – போக்சோவில் ஆசிரியர் 2வது முறையாக கைது..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் நடராஜன் ( வயது 54) கடந்த 12ஆம் தேதி கோவை மாவட்ட பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் உதவி மைய பணியாளர்கள் அரசு பள்ளிக்கு சென்று பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் குழந்தைகள் உதவி மையம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது கிடைத்த தகவல் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பள்ளிக்கூடத்தில் 7 – ம் வகுப்பு , 8- ம் வகுப்பு படிக்கும் 9 மாணவிகளிடம் இடைநிலை ஆசிரியர் நடராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதனை பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்ததாகவும் தெரிய வந்தது. இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஹஸ்பா சிறுமுகை காவல் நிலையத்தில் புகார் செய்தார். மேட்டுப்பாளையம் அனைத்து பெண்கள் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஆசிரியர் நடராஜன் மாணவிகளுக்கு பாலில் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவர் ஏற்கனவே மற்றொரு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோவில் கைது செய்யப்பட்டு பணியிட நீக்கம் செய்யப்பட்டவர். எனவே இவர் போக்சோ சட்டத்தில் இரண்டாவது முறையாக கைது செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.