கோவை சிறையில் திடீர் சோதனை- கைதியிடம் கஞ்சா சிக்கியது.!!

கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு செல்போன், கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயன்பாடு உள்ளதா? என போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சிறைக்குள் கைதி ஒருவர் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று முன் தினம் சிறைக்குள் சென்று அதிரடி சோதனை நடத்தினர் .அதில் வால்மேடு பிளாக்கில் உள்ள 3-வது அறையில் கைதி ஒருவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம். பகுதியில் கஞ்சா வழக்கில் கைதாகி கடந்த மாதம் சிறையில் அடைக்கப்பட்ட ரஹீம் ( வயது 26) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 9 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து ஜெயிலர் சரவணகுமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் ரஹீம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.