நாசிக்கில் சுகோய் போர் விமானம் விழுந்து நொறுங்கியது – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பைலட்டுகள்.!!

காராஷ்டிர மாநிலம், நாசிக்கில் சுகோய் போர் விமானம் இன்று வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானியும் துணை விமானியும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டம், ஷிராஸ்காவ் கிராமத்தின் அருகே உள்ள ஒரு வயலில் இன்று சுகோய் போர் விமானம் விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்ததில் அதன் பாகங்கள் உடைந்து தீப்பிடித்தன. இதனை அறிந்த அப்பகுதியினர் சம்பவ இடத்தில் திரண்டனர்.

விமானம் விழுந்ததில் உடைந்து தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் புகை மூட்டமாக காணப்பட்டது. விபத்துக்குள்ளான சுகோய் போர் விமானமானது, இரட்டை என்ஜின் கொண்டது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த விமானம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) மையத்திலிருந்து வழக்கமான பராமரிப்புக்குப் பின்னர், நாசிக்கில் உள்ள ஓசரில் இருந்து புறப்பட்டது என்றும், இந்த விமானம் தற்போது விமானப் படையின் இருப்பு விமானப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் விமானிகள் இருவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாரும், அவசர சேவைப் பிரிவினரும் காயமடைந்த விமானிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர்.சுகோய் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட இரட்டை என்ஜின், இரட்டை இருக்கை வசதிகள் கொண்ட 4ம் தலைமுறை போர் விமானம் ஆகும். எச்ஏஎல் உரிமத்தின் கீழ் இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. இது 20 ஆண்டுகளுக்கும் மேலாக விமானப்படையில் இயங்கி வருகிறது. மேலும், சுகோய் போர் விமானம் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டு எம்கேஐ வகை என்ற பெயரில் சமீபத்தில் புதிய வகை வெளியிடப்பட்டுள்ளது.