சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து, பூமியை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 3 விண்வெளி வீரர்களுடன் இந்திய நேரப்படி, செவ்வாய்க்கிழமை இன்று காலை 10.35 மணியளவில் புறப்பட்ட விண்கலம், பூமிக்கு இன்னும் 15 மணிநேரத்தில் வந்துசேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கிய ஸ்டாா்லைனா் விண்கலம், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் பட்ச் வில்மோா் சா்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி அடைந்தது.
ஒன்பது நாள்களுக்குப் பிறகு ஸ்டாா்லைனா் மூலமே அவா்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவதாக இருந்தது. இருந்தாலும், தொழில்நுட்பக் கோளாறு காரணாக அவா்களால் திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியவில்லை. இதன் காரணமாக, அவா்கள் இருவரும் கடந்த 9 மாதங்களாக சா்வதேச விண்வெளி நிலையத்திலேயே சிக்கினா்.
நீண்ட முயற்சிக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ், வில்மோா் ஆகியோரை பூமிக்கி திரும்ப அழைத்து வர அனுப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலன் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி மையத்தை ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்தது.
இந்த டிராகன் விண்கலத்தில் தற்போது சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ரஷிய நாடுகளைச் சோ்ந்த 4 விண்வெளி வீரா்கள் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணிக்கு, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் பூமியை நோக்கி புறப்பட்டுள்ளது.
இதில், சுனிதா வில்லியம்ஸ், பட்ச் மற்றும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்த இரண்டு விண்வெளி வீரர்கள் பூமியை நோக்கி வந்துகொண்டுள்ளனர்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தையொட்டி கடல் பகுதிக்கு அமெரிக்க நேரப்படி இன்று(செவ்வாய்) மாலை 5.57 மணிக்கு வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.