சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்-நாசா அறிவிப்பு..!

ல்ல செய்தியாக விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ். இன்றிரவு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-10 கிளம்புகிறது.

இந்திய நேரப்படி நாளை அதிகாலை கிளம்புகிறது.

விண்வெளியில் தங்கி ஆய்வு செய்ய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதாவில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் கடந்த ஜூன் 5, 2024 ம் தேதி போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலமாக 10 நாட்கள் பயணமாக விண்வெளிக்கு சென்றனர். ஆனால் எதிர்பாராத வகையில் ஸ்டார்லைனரில் ஏற்பட்ட பழுது காரணமாக இருவரும் பூமிக்கு திரும்ப முடியாமல் கடந்த ஒன்பது மாதங்களாக விண்வெளி நிலையத்தில் தவித்து வருகின்றனர்.

விண்கலம் பூமியில் பத்திரமாக தரையிறங்க த்ரஸ்டர் எனப்படும் அமைப்பு பயன்படும். இந்த விண்கலத்தில் த்ரஸ்டரில் பிரச்சினை ஏற்பட்டதன் காரணமாக இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை.

பலரும் சுனிதாவையும், வில்மோரையும் பத்திரமாக மீட்க வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கினர். இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. நான் ஜனாதிபதியானால் சுனிதா வில்லியம்ஸ்சை மீட்டு பத்திரமாக பூமிக்கு கொண்டுவருவேன் என டிரம்ப் கூறியிருந்தார்.

அதேபோல, ஜனாதிபதியான பின்னர் சுனிதா வில்லியம்ஸை உடனடியாக மீட்க எலான் மஸ்க்குக்கு டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து மீட்பு பணிகள் வேகமடைந்தன. இதையடுத்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர், எலான் மஸ்கிற்கு சொந்தமான, ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் மூலம் வருகிற 16ம் தேதி பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று நாசா தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ், புட்ஸ் வில்மோர் பூமி திரும்வுவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. நேற்று அதிகாலை 5.18 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து டிராகன் விண்கலத்துடன் சீறி பாய தயாராக இருந்த பால்கன் 9 ராக்கெட்டில் கடைசி நேரத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-10 மிஷன் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சுனிதாவை அழைத்து வரும் க்ரூ-10 மிஷன் ஒத்தி வைக்கப்பட்டதற்கு ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம் என்று நாசா தெரிவித்திருந்தது. அதனை சரிசெய்யும் பணியில் விண்வெளி ஊழியர் ஈடுபட்ட நிலையில், இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.56 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.