அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று (மார்ச்19) போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில், பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலர் முருகானந்தம் அரசு உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த உத்தரவில், “அங்கீகரிக்கப்படாத சங்கங்கள், சில கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை(மார்ச் 19) அன்று ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய முன்வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் அல்லது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது, அரசு அலுவலகங்களின் இயல்பான செயல்பாட்டைப் பாதிக்கும்.
அவ்வாறு அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு சம்பளம் கிடையாது. பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்றும், மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பகுதிநேர ஊழியர்கள், தினசரி ஊதியம், ஒப்பந்த ஊதியம் பெறுபவர்கள், பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராதவர்களின் விவரங்களை சேகரிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.