கோவையில் சரக்கு வேனில் கடத்தப்பட்ட 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்- ஒருவர் கைது…

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல் துறை தலைவர் ஜோசி நிர்மல் குமார் தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் நேற்றுகோவை – சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 300 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனத்தை ஓட்டி வந்த அரிசி மற்றும் வாகன உரிமையாளரான பாலக்காடு மாவட்டம் கொடும்பு, சென்னம் கொடுவை சேர்ந்த,சிவதாசன் (வயது 45) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் அந்த ரேஷன்அரிசியை எஸ் .ஐ. எச் .எஸ். காலனி, ‘நீலி கோணாம் பாளையம் பகுதி பொதுமக்களிடம குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவில் உள்ள கொடும்பு பகுதியில் உள்ள ஓட்டல்கள் மற்றும் மளிகை கடைகளுக்கு அதிக லாபத்திற்கு கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது இதன் பேரில் அவரை கைதுசெய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.