பள்ளி, கல்லூரி மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர் உதவித் தொகை இருமடங்கு உயர்வு – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!

ள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர் உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகை, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை ரூ.1,000 என்பதை ரூ.1,500 ஆகவும் உயர்த்தி வழங்கினார்கள். அத்துடன், தற்போது, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையையும் உயர்த்தி அவர்கள் ஊக்கமுடன் கல்வி கற்க உதவி செய்துள்ளார்கள்.

அதாவது, பள்ளி மாணவ, மாணவியர்களில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு ரூ.1,000 என்பதை இரு மடங்காக உயர்த்தி ரூ. 2,000 என்றும்; 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை  மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு ரூ.3,000 என்பதை இரு மடங்காக உயர்த்தி ரூ.6,000 என்றும்; 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியரருக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு ரூ.4,000 என்பதை இரு மடங்காக உயர்த்தி ரூ.8,000 என்றும் உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்.

அதேபோல, கல்லூரிகளில் பட்டப் படிப்பு மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ரூ.6 ஆயிரம் என்பதை ரூ.12 ஆயிரம் என இருமடங்காக உயர்த்தி வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்கள்.

மேலும், தொழிற்கல்லூரிகளிலும், பட்ட மேல்படிப்புகளிலும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ரூ.7 ஆயிரம் என்பதை ரூ.14 ஆயிரமாக இரண்டு மடங்கு உயர்த்தி வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்கள்.

இப்படி, மாற்றுத் திறனாளிகள் உள்ளங்களில் தேங்கிக் கிடக்கும் ஏக்க உணர்வுகளைத் தீர்க்கும் வகையில் அவர்களுக்கு அனைத்து வகையிலும் உதவிவரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றுத் திறனாளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடும் வகையிலும் அவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையிலும் அவர்களுக்கு வழங்கப்படும்.

கல்வி உதவி ஊக்கத் தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி அதற்காக ரூ.14 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரத்தை அனுமதித்து செப்டம்பர் 10 ஆம் தேதி ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

பள்ளி, கல்லூரி படிப்புகளுடன், மாற்றுத் திறனாளி மாணவ- மாணவியர்கள் படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் ஆராய்ச்சிப் படிப்புகளிலும் ஈடுபட வேண்டும் என்னும் விழைவோடு ஆராய்ச்சிப் படிப்பில் சேரும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஊக்கமளிப்பதற்காக முதல்வரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தின்கீழ் தலா ரூ.1 லட்சம் வீதம் 50 மாற்றுதிறனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

முதல்வர் பிறப்பித்துள்ள இந்த ஆணைகளின் பயனாக தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர் வாழ்வில் ஊக்கம் பெருகும், ஆக்கம் சேரும், உற்சாகம் பொங்கும், அறிவொளி பரவும் அவர்கள் வாழ்க்கை சிறக்கும் என்பது உறுதியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.