பள்ளத்தில் கார் கவிழ்ந்து தீப்பிடித்து டிரைவர் உடல் கருகி பரிதாப பலி..

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் நேற்று இரவு வேகமாக கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் தென்திருப்பதி நால்ரோடு, குளிர்பதன கிடங்கி அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாடு இழந்து பாலத்தின் மீது மோதியது. தொடர்ந்து அந்த கார் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது .இதில் கார் பலத்த சேதம் அடைந்ததுடன் திடீரென்று தீப் பிடித்து எரிந்தது. இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. காரை ஓட்டி வந்தவர் இருக்கையில் அமர்ந்தபடி உடல் கருகி பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காருக்குள் தீயில் கருகி இறந்த டிரைவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் ?என்பது தெரியவில்லை .இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..