விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ம் தேதி த.வெ.க முதல் மாநாடு – விஜய் சொன்ன அப்டேட்.!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் அறிவித்துள்ளார். இதனால் நண்பாஸ், நண்பீஸ் எல்லாம் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார்கள்.

விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு இந்த மாநாடு நடைபெறும் என விஜய் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல் நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழக மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்து கொண்டே வருகிறது.

கழகக் கொடியேற்று விழாவின் போது நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாக கூறியிருந்தோம். நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றும் வகையில் தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக் கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு.

வரும் அக்டோபர் 27ஆம் தேதி மாலை 4 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டிய அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெறுகிறது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது.

தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே நடந்து வரும் நிலையில் அதற்கான களப்பணிகளும் தொடங்கப்படவுள்ளன என்பதையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம்.

இந்த நிலையில் நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக, தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் உரிமையுடன் வேண்டுகிறேன்.

விரைவில் சந்திப்போம்

வாகை சூடுவோம்

அன்புடன் விஜய்

இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார். இதனால் கட்சி நிர்வாகிகளும் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மாநாட்டில் கொள்கைகள் அறிவிக்கப்படும். அது எந்த மாதிரியான கொள்கையாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

விஜய்யின் முதல் மாநாடு வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி நடக்கப் போவதாக சொல்லப்பட்டது. விக்கிரவாண்டியில் அதற்கான இடத்தை தேர்வு செய்து அனுமதி கடிதத்தை புஸ்ஸி ஆனந்த் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஆனால் மாநாடு தொடர்பான சந்தேகங்களைக் கேட்டிருந்தது காவல் துறை. மேலும் 21 கேள்விகளுக்கு பதில் கேட்கப்பட்டது..