2000 ரூபாய் நோட்டுகளை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றி தர கமிஷன் பேசிய கும்பல்..மொத்த பணத்துடன் ஓட்டம் – பெண் உள்பட போலீசில் சிக்கிய கும்பல்.!

கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 44 வயதான பிரகாஷ். இவர் பெரிய கடை வீதியில் தங்க நகைகளை வாங்கி விற்கும் கடை நடத்தி வருகிறார்.பிரகாஷிற்கு தனியார் வங்கியில் வேலை பார்க்கும் வேதா சங்கர் என்பவர் மூலம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் குட்டி என்கிற சின்ன குட்டி என்ற நபர் அறிமுகம் ஆகியுள்ளார். சின்ன குட்டி தனக்கு தெரிந்த ஒரு நபரிடம் 2000 ரூபாய் நோட்டுகள் உள்ளதாகவும், அதனை 15 சதவீதம் கமிஷன் அடிப்படையில் மாற்றிக் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இது தொடர்பாக நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 38 வயதான மீனா ,தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 52 வயதான பாண்டியன்,45 வயதான அழகர்சாமி, 29 வயதான சௌமியன்,26 வயதான கருவேலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கவாஸ்கர், மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த 43 வயதான குட்டி என்கின்ற சின்ன குட்டி ஆகிய ஆறு பேரும் காரமடையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் சந்தித்து கமிஷன் தொடர்பாக பேசி உள்ளனர்.மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி அதற்கு இணையான 500 ரூபாய் நோட்டுகளை கொண்டு வருமாறு கூறியுள்ளனர்.இதனை நம்பி பிரகாஷ் அம்பராம்பாளையம் அருகே ஒரு கோடியே 27 லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.அப்போது மூன்று கார்களை வந்த மோசடி கும்பல் பிரகாஷிடம் 500 ரூபாய் கட்டுகளை பார்க்க வேண்டும் என கூறியுள்ளது. இதனை அடுத்து பிரகாஷிடம் இருந்து ரூபாய் ஒரு கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும், 20,000 மதிப்புள்ள பணம் என்னும் இயந்திரத்தையும் எடுத்துக்கொண்டு அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதுகுறித்து ஆனைமலை காவல் நிலையத்தில் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் ஆனைமலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.மோசடி கும்பலில் வாகன எண்ணை வைத்து போலீசார் தேனி மாவட்டத்தில் பதுங்கி இருந்த பெண் உட்பட ஆறு குற்றவாளிகளையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மூன்று சொகுசு கார்கள், ஒரு கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது..