ஒரு கிலோ தங்க கட்டிகள் மோசடி செய்த கும்பல் – 24 மணி நேரத்தில் மடக்கி பிடித்த போலீஸ்..!

தஞ்சாவூர் மாவட்டம்  பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ஹரிசங்கர்,  நகை வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் சந்திரசேகர் என்பவர் தொலைபேசி மூலம தொடர்பு கொண்டு தன்னிடம் அதிக பணம் இருப்பதாகவும், தான் தங்க கட்டிகள் வாங்கலாம் என்று கருதுகிறேன். உங்களிடம் தங்க கட்டிகள் இருந்தால் தாருங்கள் .நான் பணமாக தருகிறேன் என்று கூறியுள்ளார். அத்துடன் ஹரிசங்கரிடம் கடந்த 11-ந் தேதி  1 கிலோ தங்கம்  கட்டிகளுடன் சூலூரில் உள்ள பாப்பம்பட்டி பிரிவிற்கு வாருங்கள் என்று சந்திரசேகர் கூறியுள்ளார். இந்நிலையில் ஹரிசங்கர் ஒரு கிலோ தங்க கட்டிகளுடன் சூலூர் பக்கம் உள்ள பாப்பம்பட்டி பிரிவுக்கு வந்தார். பிறகு சந்திரசேகரன் ஹரிசங்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் தன்னுடைய மேனேஜர் ராஜ்குமார் என்பவரை அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார். பிறகு ராஜ்குமார் என்பவர் ஹரிசங்கரை பார்த்து அவரிடமிருந்த ஒரு கிலோ தங்க கட்டிகளை வாங்கி கொண்டுள்ளார்.. பிறகு தனது வாகனம் பழுதாகி விட்டதாகவும் அதனை சரி செய்துவிட்டு தான் பின்னால் வருவதாக கூறி ஹரிசங்கரை லட்சுமி மில் பகுதியில் இறங்கிய பிறகு தன்னை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார். பிறகு ஹரிசங்கர் லட்சுமி மில்லுக்கு வந்த பிறகு ராஜ்குமாரை தொடர்பு கொண்ட போது அவருடைய மொபைல் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது.. இந்நிலையில் ஹரிசங்கர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரில் விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், உத்தரவிட்டார்.  இதன் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு மேற்படி மோசடி வழக்கில் தப்பிச் சென்ற குற்றவாளிகளை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டும், சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டும், சைபர் கிரைம் உதவியுடனும் மேற்கொள்ளப்பட்ட தீவிர புலன் விசாரணையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மணி மகன்  பாபு (வயது 53) மயிலரசன் மகன் நவீன் குமார் (வயது 25) செல்வராஜ் மகன் பிரபு (வயது 25) மற்றும் இளஞ்சிறார் ஒருவர் மேற்படி ஹரிசங்கரை ஏமாற்றி அவரிடமிருந்த ஒரு கிலோ தங்க கட்டியை திட்டமிட்டு மோசடி செய்தது தெரிய வந்தது. இந்நிலையில் மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மேற்படி வழக்கின் 1 கிலோ தங்கக் கட்டியை பறிமுதல் செய்தனர்..கைது செய்யப்பட்ட பாபு நவீன் குமார் மற்றும் பிரபு ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர். மேலும் மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட இளஞ்சிறார் ஒருவரை அரசு கூர்நோக்கு இல்லத்திற்கும் அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் பாராட்டினார்..