ரூ.20 லட்சம் கேட்டு காரில் கடத்தப்பட்டவர் போலீசில் தஞ்சம்.!!

கோவை அருகே உள்ள வெள்ளக்கிணறு,ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் நிஷாந்த் ( வயது 27) வெளிநாட்டில் வேலை வாங்கி தரும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. நிஷாந்தின் மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். இதனால் நிஷாந்த் தனது பெற்றோருடன் தங்கி இருந்தார் ..இந்த நிலையில் நிஷாந்தின் வீட்டிற்கு ஒரு சிவப்பு நிற கார் வந்தது. அந்த காரில் இருந்து 4 பேர் இறங்கி வந்தனர். அப்போது அவர்களை பார்த்தது நிஷாந்தின் தாயார் ஆனந்தி நீங்கள் யார்? என்று கேட்டார் அதற்கு அவர்கள் நாங்கள்நிஷாந்தின் நண்பர்கள் .அவரை பார்க்க வந்திருக்கிறோம் என்று கூறினார்கள். பின்னர் அந்த 4 பேரும் நிஷாந்தை வெளியே அழைத்துச் சென்றனர். அப்போது தாயார் ஆனந்தி எங்கே செல்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர்கள் 4 பேரும் ஒருவேலை தொடர்பாக அழைத்துச் செல்கிறோம்.உடனே வந்து விடுவோம் என்று கூறினர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் நிஷாந்த் வரவில்லை. இதையடுத்து நிஷாந்தின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது ‘ஸ்விட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. மனைவி வீட்டுக்கு சென்றிருக்கலாம் என்று நினைத்து விட்டார். பின்னர் பலமுறை தொடர்பு கொண்டும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் சந்தேகம் அடைந்த ஆனந்தி தனது மரு மகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு நிஷாந்த் வந்தாரா? என்று கேட்டார். அதற்கு அவர் இல்லை என்று கூறியதால் சந்தேகம் ஏற்பட்டது .. இதற்கிடையில் நேற்று அவரது மனைவியின் செல்போனுக்கு வாட்ஸ்-அப் கால் வந்தது. அதில் பேசிய மர்ம ஆசாமி உங்கள் கணவரை நாங்கள் தான் கடத்தி வைத்திருக்கிறோம்.. அவர் எங்களுக்கு பணம் அதிகமாக கொடுக்க வேண்டும். ஆனால் கொடுக்க மறுக்கிறார். எனவே நீங்கள் ரூ 20 லட்சம் கொடுத்தால் தான் அவரை விடுவோம் இல்லை என்றால் விடமாட்டோம் என்று மிரட்டியுள்ளனர். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே தனது மாமியாருக்கு தொடர்பு கொண்டு கூறினார். இது குறித்து துடியலூர் போலீசில் தாயார் கலாமணி என்ற ஆனந்தி ( வயது 47) புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.இந்த நிலையில் நேற்று காலையில் திடீரென கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிஷாந்த் துடியலூர் காவல் நிலையத்தில் வந்து தஞ்சம் அடைந்தார் அப்போது போலீசாரிடம் நான் தொழில் விஷயமாக வெளியே சென்றிருந்தேன். என்னை யாரும் கடத்தவில்லை என்று தெரிவித்தார் .தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரித்து வருகிறார்கள். கடத்தியவர்களின் மிரட்டலால் உண்மையை மறுக்கிறாரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.