கோலாகலமாக தொடங்கியது பாரீஸ் ஒலிம்பிக்… இந்தியாவின் தேசியக் கொடியை ஏந்திச் சென்ற பி.வி.சிந்து, சரத் கமல்.!!

விளையாட்டு உலகின் திருவிழாவாகக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் கோலாகலமாகத் தொடங்கியது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாகக் கருதப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை அள்ளி தங்கள் நாட்டுக்குப் பெருமை சேர்க்கின்றனர்.

அந்த வகையில் 33-வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று வண்ணமயமாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தொடங்கியது. இந்தியா சார்பில் தடகளம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட 16 வகையான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க 117 பேர் களமிறங்குகின்றனர். மேலும் 206 நாடுகளை சேர்ந்த 10741 வீரர் வீராங்கனைகள் தங்களது திறமையை வெளிக்காட்ட உள்ளனர்.

ஒவ்வொரு நாட்டு வீரர்களும் தங்களது தேசியக் கொடியைக் கையில் ஏந்திக் கொண்டு பாரீஸின் புகழ்பெற்ற நதியான சீன் நதியில் படகுகளில் வலம் வந்தனர். பாரீஸில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் போட்டியாகும். இந்தியா சார்பில் டேபிள் டென்னீஸ் வீரரான சரத் கமல் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து ஆகியோர் ஏந்திச் சென்றனர்.

பதக்கப் பட்டியில் வல்லரசு நாடுகளை விட மிகவும் பின்தங்கியிருக்கும் இந்தியா இந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வென்று நாட்டுக்குப் பெருமை தேடித் தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 100 ஆண்டுகளாக இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுத்து வருகிறது. இதில் 10 தங்கம், 9 வெள்ளி, 16 வெண்கலப் பதக்கங்கள் என 35 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.