வாடிக்கையாளரிடம் 50 காசு அதிகம் வசூலித்த அஞ்சல் துறை… ரூ.15,000 அபராதம்- நுகர்வோர் கோர்ட் உத்தரவு..!

வாடிக்கையாளரிடமிருந்து 50 காசுகள் அதிகமாக வசூல் செய்த அஞ்சல் துறைக்கு ₹15,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது, இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சென்னையை சேர்ந்த மானசா என்பவர் கடிதம் அனுப்புவதற்கு தபால் நிலையத்திற்கு சென்றார். அவரது கடிதம் அனுப்புவதற்கு ₹29.50 செலவான நிலையில், தபால் அலுவலர் ₹30 கொடுக்கச் சொல்லி வலியுறுத்தினார்.
மானசா தனது 50 காசுகள் திரும்ப கேட்ட போது, கணினியில் ₹30 காட்டியதாக தெரிவித்து, மீதி காசு கொடுக்க மறுத்தார். இதனால் விரக்தியடைந்த மானசா, மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் விசாரணை செய்யப்பட்டது.

தினமும் லட்சக்கணக்கான பரிவர்த்தனைகள் செய்யும் அஞ்சல் துறையில் ஒவ்வொருவரிடமிருந்தும் 50 பைசா பறிப்பது பெரும் மோசடி என அவர் மானசா தனது வாதத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையம், 50 பைசா அதிகமாக வசூல் செய்ததை அஞ்சல் துறை ஒப்புக் கொண்டதையடுத்து, மானசாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ₹10,000 இழப்பீடு செலவுகள் ₹5,000 மற்றும் அவருக்கு திருப்பி கொடுக்க வேண்டிய 50 காசு ஆகியவற்றை வழங்க உத்தரவிட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.