செல்போன் பறித்த கொள்ளையனை பொதுமக்கள் துரத்தி பிடித்து போலீசில் ஒப்படைப்பு..!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கமுள்ள புதுப்பாளையம், குமார் நகரை சேர்ந்தவர் சக்திவேல்( வயது 28)பனியன் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று செல்லப்பம்பாளையம் பிரிவில் பைக்கில் உட்கார்ந்து செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்து ஒரு ஆசாமி இவரது  செல்போனை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பி சென்றார். உடனே அவர் சத்தம் போட்டார். அங்கிருந்து பொதுமக்கள் துரத்திச் சென்றனர்.வேகமாகச் சென்ற கொள்ளையன் கணியூர் டோல்கேட் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். அவனைப் பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து கருமத்தம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர் . போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவன் கோவை உக்கடம் என் எச். ரோட்டை சேர்ந்த ரிஸ்வான் (வயது 34) என்பது தெரியவந்தது. இவரிடம் விசாரணை நடந்து வருகிறது.