ஆசனூர் வனப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்கும் பணி தீவிரம்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  தர்மபுரி பகுதியில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பி உரசி காட்டு யானை உயிரிழந்ததால் வனப்பகுதி மற்றும் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்குமாறு தமிழக அரசு வனத்துறை மற்றும் மின்வாரியத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசனூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் தாழ்வாக உள்ள மின் கம்பிகளை சீரமைத்து உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆசனூர் அருகே சாலை ஓரத்தில் உள்ள தாழ்வான மின் கம்பிகளை மின்வாரிய ஊழியர்கள் மாற்று மின்கம்பங்கள் நட்டு உயர்த்தும் பணி மேற்கொண்டு வருகின்றனர். ஆசனூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா அறிவுரையின் பேரில் ஆசனூர் வனச்சரகர் சிவக்குமார் மற்றும் வனத்துறையினர் இப்பணிகளை கண்காணித்து வருகின்றனர்.